திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது போலீஸ் டி.ஜி.பி. யாக இருந்தவர் சென்குமார்.
அங்கு கம்யூனிஸ்டு ஆட்சிக்கு வந்ததும், சென் குமார் பதவி நீக்கம் செய்யப்பட்டார். கேரளாவில் நடந்த புட்டிங்கல் அம்மன் கோவில் வெடி விபத்து உள்ளிட்ட விவகாரங்களில் திறமையாக செயல்படவில்லை என்ற காரணம் கூறி அவர், பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்குமார், சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.
சென்குமாரின் மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு அவருக்கு மீண்டும் டி.ஜி.பி. பதவி வழங்க கேரள அரசுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவு கிடைக்கப் பெற்றும் கேரள அரசு சென்குமாருக்கு பதவி வழங்கவில்லை.
எனவே அவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரள அரசு மீதும், அதன் தலைமைச் செயலாளர் மீதும் சுப்ரீம் கோர்ட்டில், கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார்.
சென்குமார் தொடர்ந்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கால் கேரள அரசுக்கு சிக்கல் ஏற்பட்டது. இந்த பிரச்சினையில் இருந்து விடுபட இப்போது கேரள அரசும், சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவிற்கு விளக்கம் கேட்டு ரிட் மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது.
கேரளாவில் தற்போது போலீஸ் டி.ஜி.பி.யாக லோக்நாத் பெக்ரா உள்ளார். இந்த நிலையில் சென்குமாருக்கு மீண்டும் பதவி வழங்குவதால் ஏற்படும் சிக்கலுக்கு பதில் கேட்டு ரிட் மனு தாக்கல் செய்யப்படும் என்றும் இன்றே இந்த மனுதாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் தெரிகிறது.