செய்திகள்

செங்குன்றம் அருகே டிரைவரை தாக்கி கார் கடத்தல்: 4 பேர் கைது

செங்குன்றம் அருகே டிரைவரை தாக்கி கார் கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரியபாளையம்:

சென்னை வடபழனியில் உள்ள தனியார் டிராவல்ஸ் நிறுவனத்துக்கு வந்த 4 பேர் தாங்கள் பெங்களூரை சேர்ந்த குமார், பிரசாத், தினேஷ், முகமது ஜின்னா என்றும், தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதாகவும் கூறி திருப்பதிக்கு செல்ல கார் வேண்டும் என்று கேட்டனர்.

இதையடுத்து அவர்களுக்கு கார் ‘புக்’ செய்யப்பட்டது. காரை டிரைவர் செல்வராஜ் ஒட்டி சென்றார். நேற்று இரவு செங்குன்றம் அருகே ஜனப்பன் சத்திரம் கூட்டு சாலையில் கார் சென்று கொண்டிருந்தது.

அப்போது கடையில் தண்ணீர் பாட்டில் வாங்கி தரும்படி டிரைவர் செல்வராஜிடம் பணம் கொடுத்தனர். அவர் தண்ணீர் பாட்டில் வாங்கி சென்று கார் அருகே வந்த போது, 4 பேரும் அவரை கீழே தள்ளிவிட்டு காரை கடத்தி சென்றனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வராஜ் சோழவரம் போலீசில் புகார் செய்தார். உடனே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

தாமரைப்பாக்கம் கூட்டு சாலையில் வாகன சோனையில் ஈடுபட்ட போலீசார் கடத்தப்பட்ட கார் வருவதை பார்த்து நிறுத்த முயற்சித்தனர். ஆனால் கார் நிற்காமல் சென்றது. உடனே போலீசார் ஒரு கிலோமீட்டர் தூரம் விரட்டி சென்று மடக்கி பிடித்து 4 பேரையும் கைதுசெய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.