செய்திகள்

ஸ்டாலின் இடத்தில் மு.க.அழகிரி இருந்தால் அனைவரையும் ஆட்டிப்படைத்திருப்பார்: செல்லூர் ராஜூ

தி.மு.க. தலைமை ஏற்க மு.க. ஸ்டாலின் தகுதியான ஆள் கிடையாது. அவரது இடத்தில் மு.க. அழகிரி இருந்திருந்தால் அனைவரையும் ஆட்டிப் படைத்திருப்பார் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

மதுரை:

பெரியாரின் 139-வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை தல்லாகுளத்தில் உள்ள அவரது சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் அமைச்சர் செல்லூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

திராவிட இயக்க வரலாற்றில் பெரியாரின் கொள்கைகளை மதித்து நடக்கும் கட்சி அ.தி.மு.க. பெரியாரின் கொள்கைப்படி பெண்களுக்கு இட ஒதுக்கீடு கொண்டு வந்தவர் ஜெயலலிதா.

தமிழகத்தில் பிற மொழிகளை மாணவர்களிடையே கொண்டுவர எந்தவித சட்ட மசோதாவும் சட்டமன்றத்தில் கொண்டு வரப்படவில்லை.

தி.மு.க. தலைமை ஏற்க மு.க. ஸ்டாலின் சரியான ஆள் இல்லை. முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் அதிகம் பேசப்பட்டவர் மு.க. அழகிரி தான். மு.க. ஸ்டாலின் இடத்தில் மு.க. அழகிரி இருந்திருந்தால் அனைவரையும் ஆட்டிப்படைத்திருப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.