செய்திகள்

மீனவர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்துவோம்: சீமான்

சீன என்ஜின்களை தடை செய்யாவிட்டால் மீனவர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்துவோம் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

விசைப்படகுகளில் சீன என்ஜினை தடை செய்ய கோரி கடந்த 23-ந்தேதி காசிமேடு மீனவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பஸ்கள், வாகனங்கள் நொறுக்கப்பட்டன. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தினார்கள். போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மீனவர்கள் மீதான வழக்குகளை திரும்ப பெறக்கோரி காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் மீனவர்கள் போராட்டம் நடத்தும் இடத்துக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்றார். மீனவர்களுக்கு ஆறுதல் கூறிய அவர் அவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.

பின்னர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-

மீன் பிடி படகுகளில் சீன என்ஜின் பொருத்தப்படுவதால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் அடியோடு பாதிக்கப்படுகிறது. மீன்களின் இன பெருக்கத்துக்கு அது பாதிப்பாக உள்ளது. எனவே சீன என்ஜின்களை முற்றிலும் தடை செய்ய வேண்டும். இதற்காக தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும்.

மீனவர்களுக்கு சீமான் ஆறுதல் கூறிய காட்சி.

இந்த பிரச்சனையை அரசு கண்டு கொள்ளாவிட்டால் மீனவர்களுக்காக நாம் தமிழர் கட்சி போராட்டம் நடத்தும். மீனவர்கள் மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.