செய்திகள்

அப்துல்கலாம் சிலை அருகில் பகவத்கீதை: பா.ஜ.க. அரசின் திட்டமிட்ட சதி- சீமான்

அப்துல்கலாம் சிலை அருகில் பகவத்கீதையை வைத்தது பாரதிய ஜனதா அரசின் திட்டமிட்ட சதி என சீமான் கூறினார்.

மாலை மலர்

ராமேசுவரம் பேக்கரும்பில் கட்டப்பட்டுள்ள அப்துல்கலாம் நினைவு மண்டபத்தில் உள்ள அவரது சிலை அருகே பகவத்கீதை நூல் வைக்கப்பட்டது. இதையடுத்து குர்ரான் மற்றும் பைபிளும் வைக்கப்பட்டு அகற்றப்பட்டது. இச்சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் கமுதியில் “நாம் தமிழர்” கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-

பா.ஜ.க. அரசு ராமேசுவரத்தில் அப்துல்கலாம் நினைவிடத்தில் கலாம் சிலை, வீணை வாசிக்கும் வித்துவான் போன்றும், காவி வண்ணத்திலும் அமைத்துள்ளது.


அவர் அனைத்து மதங்களுக்கும் சொந்தமானவர். அப்துல்கலாம் தான் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் திருக்குறளையும், தமிழ் இலக்கியங்களையும் உயர்வாக பேசி வந்தார்.

அதனால் உலக பொதுமறையான திருக்குறள் புத்தகத்தை அவரது சிலை அருகே வைத்திருக்க வேண்டும். பகவத்கீதையை வைத்துள்ளதால் தேவையற்ற சர்ச்சையும், விவாதங்களும் எழுந்துள்ளன. இது பா.ஜ.க. அரசின் திட்டமிட்ட சதி.