செய்திகள்

பிரதமர் மோடியை டுவிட்டரில் மீண்டும் விளாசிய நடிகை ரம்யா

தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான் படத்தின் டிரைலரை குறிப்பிட்டு பிரதமர் மோடி நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார் என நடிகை ரம்யா மீண்டும் டிவிட்டரில் விமர்சனம் செய்துள்ளார். #DivyaSpandana #PMModi

ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக ஆளும் பாரதீய ஜனதா அரசுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் வார்த்தைப் போர் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நடிகையும், காங்கிரஸ் கட்சியின் தகவல் தொழில் நுட்ப பிரிவு தலைவருமான, ரம்யா என்ற திவ்யா ஸ்பந்தனா, கடந்த சில தினங்களுக்கு முன் டுவிட்டர் பதிவில் ஒரு போட்டோஷாப் புகைப்படத்தை பதிவிட்டார்  

அதில், ’பிரதமர் மோடி தன் மெழுகு சிலை மீது தானே திருடன்’ என எழுதிக் கொள்வது போல் உள்ளது. இந்த சர்ச்சை புகைப்படத்தை பார்த்த உத்தரப்பிரதேச வழக்கறிஞர் சையது ரிஷ்வான் அகமது என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கோமதிநகர் போலீசார் ரம்யா மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்தநிலையில்,  நடிகர்கள் அமிதாப் பச்சன், அமீர்கான் ஆகியோர் நடிக்கும், ' தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான்' என்ற படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. இந்தியாவை ஆட்சி புரிந்த  இங்கிலாந்து கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக கடற்கொள்ளையர்கள் போர் நடந்தது குறித்து விளக்கும் படம் இதுவாகும்.

இந்த படத்தில் நடிகர் அமீர்கான் அனைவரையும் ஏமாற்றும் கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். ஒரு காட்சியில் அவர் நம்பிக்கை துரோகம் என்பது எனது சுபாவம் என்று கூறுவார். இதனை வைத்து ரம்யா மீண்டும் டுவிட்டரில் விமர்சனம் செய்துள்ளார்.

அமீர்கான் புகைப்படத்தை பதிவிட்டு,  ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்திற்கு மோடி நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார் என டுவிட்டரில் விளாசி உள்ளார். அவரது இந்த பதிவு சமூக வலைதளங்களில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது. #DivyaSpandana #PMModi

SCROLL FOR NEXT