புல்வாமா தாக்குதலை தொடர்ந்து நாட்டில் நிலவிவரும் சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து உளவுத்துறை மற்றும் காவல்துறைகளைச் சேர்ந்த உயரதிகாரிகளுடன் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து, ஜம்முவில் உள்ள ராஜ்பவனில் காஷ்மீர் கவர்னர் சத்யபால் மாலிக் அம்மாநில உள்துறை மற்றும் காவல்துறை உயரதிகாரிகளுடன் மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலவரம் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
முன்னதாக, பாகிஸ்தான் நாட்டின் உளவுத்துறை மற்றும் பயங்கரவாதிகளிடம் பணம் வாங்கும் கைக்கூலிகள் காஷ்மீரில் உள்ளனர். அவர்களுக்கான பாதுகாப்பு விலக்கப்படும் என கடந்த 15-ம் தேதி மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் எச்சரித்திருந்தார்.
இந்நிலையில், காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களான மிர்வாயிஸ் உமர் பாரூக், யாசின் மாலிக் உள்ளிட்டவர்களுக்கு அளிக்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு ரத்து செய்யப்படுவதாக அம்மாநில அரசு நேற்று அறிவித்தது.
இதனையடுத்து ஹரியத் பிரிவினைவாத அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ‘இந்த போலீஸ் பாதுகாப்பால் காஷ்மீர் விவகாரத்தில் எவ்வித மாற்றமும் ஏற்பட போவதில்லை.
தலைவர்களின் வீடுகளின் முன் பாதுகாப்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒன்றுதான். ஹரியத் தலைவர்கள் யாரும் இந்த பாதுகாப்பை எதிர்பார்க்கவில்லை. இதனை காஷ்மீர் அரசு தான் அளித்து வந்தது. ஏற்கனவே ஹரியத் தலைவர்கள் இந்த பாதுகாப்பை எப்போது வேண்டுமானாலும் நீக்கிக் கொள்ளலாம் என தெரிவித்திருந்தனர்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.