ஜம்மு:
காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் நடைபெற்று வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெய்ஸ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் முக்கிய தளபதியான ரியாஸ் என்பவரை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். இதன் பின்னர் பயங்கரவாதிகள் பதில் தாக்குதலை நடத்துவதற்காக அடிக்கடி பாதுகாப்பு படையினருடன் மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் தெற்கு காஷ்மீரில் குல்காம் மாவட்டத்தில் உள்ள யம்ரட்ஜ் கிராமத்தில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து நேற்று இரவு பாதுகாப்பு படை வீரர்கள், ஜம்மு-காஷ்மீர் போலீசார், துணை ராணுவத்தினர் கூட்டாக இணைந்து அப்பகுதி முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் திடீரென பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். சுதாரித்துக் கொண்ட பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த மோதல் சில மணி நேரங்கள் நீடித்தது. இதில் பலியானோர்கள் குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை. ஆனால் பாதுகாப்பு படையினரின் தேடுதல் வேட்டையில் 2 அல்லது 3 பயங்கரவாதிகள் பிடிபட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.