செய்திகள்

காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிராக தேடுதல் வேட்டை - போலீசாருடன் இணைந்து ராணுவம் நடவடிக்கை

காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிராகவும், அவர்களின் பதுங்கு இடங்களை கண்டுபிடிக்கும் நோக்கிலும் ராணுவத்தினர் அதிரடியாக தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

காஷ்மீரில் ஏராளமான பயங்கரவாதிகள் பயிற்சி பெறுவது போலவும், அரசுக்கு எதிராக சூளுரைப்பது போலவும் பல்வேறு வீடியோ பதிவுகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. தடை செய்யப்பட்ட இணையதளங்கள் மூலம் வெளியாகும் இந்த வீடியோக்கள் குறித்து ஆய்வு செய்து வரும் ராணுவம், தெற்கு காஷ்மீரில் குறிப்பாக ஷோபியான் மாவட்டத்தில் இதுபோன்ற பயங்கரவாதிகளின் மறைவிடங்கள் இருக்கலாம் என கருதி வருகின்றனர்.

எனவே இந்த பயங்கரவாதிகளுக்கு எதிராகவும், அவர்களின் பதுங்கு இடங்களை கண்டுபிடிக்கும் நோக்கிலும் ஷோபியான் மாவட்டத்தில் நேற்று அதிகாலையில் ஏராளமான ராணுவத்தினர் அதிரடியாக தேடுதல் வேட்டையில் இறங்கினர். சைனாபோராவின் ஹெப் கிராமம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாநில போலீசாருடன் இணைந்து இந்த சோதனை நடந்தது.

ஆனால் இந்த சோதனையில் பயங்கரவாதிகள் பற்றியோ அல்லது அவர்களது மறைவிடங்கள் குறித்தோ எந்த துப்பும் கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து இந்த தேடுதல் பணிகளை மாலையில் பாதுகாப்பு படையினர் நிறுத்தினர். இந்த வேட்டையின் போது பல இடங்களில் உள்ளூர் கிராம மக்கள் பாதுகாப்பு படையினர் மீது கல்வீச்சில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT