மீட்கப்பட்ட மாணவன். 
செய்திகள்

தேர்வில் தோற்றதால் வீட்டைவிட்டு வெளியேறிய பள்ளி மாணவன் சென்னையில் மீட்பு

தேர்வில் தோற்றதால் பயந்து வீட்டை வீட்டு வெளியேறிய பள்ளி மாணவனை சென்னையில் மீட்ட போலீசார் பெற்றோரிடம் ஒப்படைத்தனனர்.

போரூர்:

வடபழனி நூறடி சாலை- நெற்குன்றம் சந்திப்பில் சிறுவன் ஒருவன் தவித்தபடி சுற்றி திரிந்து கொண்டிருந்தார்.

இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் வடபழனி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் அங்கு சென்று சிறுவனை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

இதில் அவன் வேலூர் மாவட்டம் நெல்லூர்பேட்டை பகுதியைச் சேர்ந்த மோகன்ராம் என்பவரது மகன் சந்துரு (14). என்பதும் தனியார் பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வருவதும் தெரிய வந்தது. சந்துரு தேர்வில் 2 பாடங்களில் தோல்வி அடைந்தார்.

இதனால் பெற்றோர் திட்டுவார்கள் என்று பயந்து வீட்டைவிட்டு வெளியேறி பஸ் மூலம் சென்னை வந்ததும் தெரிய வந்தது. உடனடியாக சந்துருவின் தந்தை மோகன்ராமுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் சென்னை வந்த மோகன்ராஜிடம் மகன் சந்துருவை போலீசார் ஒப்படைத்தனர்.