அருப்புக்கோட்டை:
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டைச் சேர்ந்தவர் காசிமுருகன் (வயது42). தொழில் அதிபரான இவர் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியின் செயலாளராக இருந்து வருகிறார். இவரது வீடு அருப்புக்கோட்டை நாடார் சிவன் கோவில் பகுதியில் உள்ள சாலையில் உள்ளது.
நேற்று இரவு இவர் தனது காரை வீட்டின் முன் நிறுத்தி இருந்தார். இந்த நிலையில் இன்று காலை அவரது மனைவி வாசல் தெளிக்க வந்து பார்த்தபோது, காரின் பின்பக்க கண்ணாடி உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அவர் தனது கணவரிடம் கூறினார். அவர் வந்து பார்த்த போது காருக்குள் ஒரு கல் கிடந்தது தெரியவந்தது. நள்ளிரவு நேரம் யாரோ கார் மீது கல் வீசி தாக்கி உள்ளனர்.
இதுகுறித்து காசிமுருகன் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு வீட்டில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்களின் பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தினார்கள்.
அப்போது 3 மர்மநபர்கள் நள்ளிரவு நேரம் காரின் கண்ணாடியை கல்வீசி உடைப்பது தெரிய வந்தது. அவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்ததா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.