லக்னோ:
முத்தலாக் தொடர்பான வழக்கில் 5 நீதிபதிகள் அமர்வு இன்று தீர்ப்பு அளித்தது. 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் 3 நீதிபதிகள் முத்தலாக் முறைக்கு எதிராகவும், 2 நீதிபதிகள் எதிராகவும் கருத்து தெரிவித்தனர்.
இறுதியாக, முத்தலாக் முறைக்கு ஆறு மாதங்கள் இடைக்கால தடை விதித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
மேலும், ‘மத்திய அரசு 6 மாதத்தில் அவரச சட்ட திருத்தம் கொண்டு வந்து முத்தலாக் பிரச்சனைக்கு தீர்வு காணலாம். அப்படி 6 மாதங்களுக்குள் சட்டம் இயற்றவில்லையென்றால் முத்தலாக் மீதான தடை அதன் பின்னரும் தொடர்ந்து நீடிக்கும். அரசியல் கட்சிகள் தங்களுக்கு இடையிலான கருத்து வேறுபாடுகளை விட்டு மத்திய அரசு கொண்டுவரும் சட்டத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’ என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
சுப்ரீம் கோர்ட்டின் இந்த பரபரப்பான தீர்ப்பு தொடர்பாக வழக்கில் பிரதிவாதியான இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியத்தின் கருத்தை அறிந்துகொள்ளும் ஆவல் மக்களிடையே மேலோங்கியுள்ளது.
இந்நிலையில், இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியத்தின் முக்கிய பொறுப்பாளர்களின் அவசர கூட்டம் இன்று லக்னோ நகரில் நடைபெற்றது. பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இவ்வாரியத்தின் செயற்குழு உறுப்பினரும் இவ்வழக்கில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்களில் ஒருவருமான ஜாபர்யாப் ஜிலானி, ‘இதுதொடர்பாக, உடனடியாக கருத்து தெரிவிப்பது உகந்ததாக அமையாது. சுப்ரீம் கோர்ட்டின் முழு தீர்ப்பையும் ஆய்வு செய்துவரும் செப்டம்பர் மாதம் பத்தாம் தேதி போபால் நகரில் நடைபெறும் இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியத்தின் செயற்குழு கூட்டத்தில் இவ்விவகாரம் தொடர்பாக விவாதித்து முடிவு செய்யப்படும்’ என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பாபர் மசூதி விவகாரம் உள்பட வேறு முக்கிய பிரச்சனை தொடர்பாகவும் போபாலில் நடைபெறும் செயற்குழுவில் விவாதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.