செய்திகள்

பிரியா வாரியர் மீதான வழக்குகளுக்கு தடை வருமா? - சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

கண் அசைவு நடிகை பிரியா வாரியர் மீதான எப்.ஐ.ஆரை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது சுப்ரீம் கோர்ட் நாளை விசாரணை நடத்த உள்ளது.

மாலை மலர்

அகில இந்திய அளவில் பரபரப்பாக பேசவைத்த பிரியா வாரியரின் கண் சிமிட்டும் காதல் பாடலை எதிர்த்து தெலுங்கானா மற்றும் மகாராஷ்டிரா மாநில காவல்நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த பாடல் முகம்மது நபி மற்றும் அவரது மனைவியார் தொடர்பான உணர்வுகளை காயப்படுத்துவதாகவும், இதன் மூலம் இஸ்லாமியர்களின் மத உணர்வை புண்படுத்துவதாக கூறி பிரியா வாரியர், இயக்குனர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அடுக்கடுக்காக வழக்குகள் பதிவு செய்வதை தடுக்கக் கோரி பிரியா வாரியர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் அவரது வழக்கறிஞர் நேற்று மனுதாக்கல் செய்தார். மேலும் இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார். இதையடுத்து இவ்வழக்கை நாளை விசாரிப்பதாக சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.

கடந்த 40 ஆண்டுகளாக மிகப்பிரபலமாக புழக்கத்தில் உள்ள பலரது மனதைக் கவர்ந்த இந்த பாடலால் முஸ்லிம் சமுதாயத்தினரின் மத உணர்வுகள் காயப்படுவதாக தற்போது சுமத்தப்படும் குற்றச்சாட்டு ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல என்றும் அடிப்படை ஆதாரமற்றது என்றும் பிரியா வாரியரின் மனுவில் கூறப்பட்டுள்ளது.