புதுடெல்லி:
கேரள மாநிலத்தில் இருந்து சவுதி அரேபியா நாட்டில் உள்ள மக்கா - மதினா நகரங்களுக்கு ஹஜ் யாத்திரை மேற்கொள்ள விண்ணப்பிக்கும் இஸ்லாமியர்களுக்கு அதிக ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என கேரள மாநில ஹஜ் கமிட்டியின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது.
இந்தியாவில் இருந்து ஆண்டுதோறும் 1 லட்சத்து 70 ஆயிரம் பேர் ஹஜ் யாத்திரை மேற்கொள்ள ஐக்கிய அரபு அமீரக அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால், இந்த எண்ணிக்கையில் மாநிலவாரியாக ஒதுக்கீடு செய்வதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டி வருகிறது.
உதாரணமாக, பீகார் மாநிலத்தில் 12 ஆயிரம் பேர் ஹஜ் யாத்திரை செல்ல ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அங்கு ஹஜ் யாத்திரை செல்ல வெறும் 6,900 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். இதற்கு நேர்மாறாக, கேரள மாநிலத்தில் இருந்து ஹஜ் யாத்திரை செல்ல 6 ஆயிரம் பேருக்கு மட்டுமே மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால், இங்கு 95 ஆயிரம் பேர் விண்ணப்பித்து காத்திருகின்றனர்.
இதனால், பீகாரில் இருந்து ஹஜ் யாத்திரை செல்ல விரும்பும் அனைவருக்குமே வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால், கேரள மாநிலத்தில் அவ்வாறு இல்லை. எனவே, ஹஜ் யாத்திரைக்கு அனுமதி அளிக்கும் விவகாரத்தில் அகில இந்திய அளவில் குலுக்கல் மூலம் இட ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என இந்த வழக்கின் மனுதாரரான கேரள மாநில ஹஜ் கமிட்டி குறிப்பிட்டிருந்தது.
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஏ.எம். கன்வில்கர் மற்றும் டி.ஒய். சந்திரசூட் ஆகியோரை கொண்ட அமர்வின் முன்னர் இன்று விசரணைக்கு வந்தது.
இவ்விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கு அறிவுறுத்திய சுப்ரீம் கோர்ட், மறுவிசாரணையை ஜனவரி 30-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. #hajpilgrim #Kerala #SC #tamilnews