போலியான ஆவணங்களை சமர்ப்பித்து விமான நிலைய அனுமதி அடையாள அட்டை பெற்றது மற்றும் சுமார் 79 கோடி ரூபாய் அளவுக்கு சட்டவிரோத நிதி பரிவர்த்தனை நடத்தியது தொடர்பாக பிரபல பத்திரிகையாளர் உபேந்திரா ராய் என்பவரை சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.
இவ்விவகாரத்தில் லக்னோ, நொய்டா, டெல்லி, மும்பை உள்பட 8 இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஏர் ஒன் ஏவியேஷன் நிறுவன உரிமையாளர் பிரசுன் ராய் என்பவர் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
நேற்று முழுவதும் உபேந்திரா ராயிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இன்று அவர் பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.
இந்நிலையில், தனக்கு எதிரான இந்த நடவடிக்கையில் அரசியல் தலையீடு இருப்பதாக உபேந்திரா ராய் தெரிவித்துள்ளார். 2ஜி வழக்கில் தொடர்புடைய பொருளாதார அமலாக்கத்துறை அதிகாரியைப் பற்றி நான் எழுதி வருவதால் எனக்கு எதிராக சி.பி.ஐ. அதிகாரிகளை தூண்டிவிட்டு நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
சி.பி.ஐ. நடவடிக்கையில் இருந்து தனக்கு பாதுகாப்பு தேடி தருமாறு சுப்ரீம் கோர்ட்டில் அவர் மனு தாக்கல் செய்திருந்தார்.