புதுடெல்லி:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கதுவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி கடந்த ஜனவரி மாதம் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பான தடயங்களை மறைத்தும், அழித்தும் திசை திருப்பியதாக மூன்று போலீசார், ஒரு சிறுவன் உள்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், கதுவா முதன்மை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று விசாரணை தொடங்கியது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றால் தங்களுக்கு நீதி கிடைக்காது என்றும், சண்டிகருக்கு வழக்கை மாற்ற வேண்டும் என்று சிறுமியின் தந்தை சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று பிற்பகலில் அவசரமாக விசாரிக்கப்பட்டது.
மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சிறுமியின் குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என வாதிட்டார். வழக்கு விசாரணையை கத்துவாவில் நடத்துவது சரியாக இருக்காது. மாநில போலீசார் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். போலீசாரின் நடவடிக்கையில் நாங்கள் திருப்தி அடைந்துள்ளோம். சி.பி.ஐ விசாரணை கோரும் மனுக்களை ஏற்க கூடாது என்றும் அவர் கூறினார்.
இதனை அடுத்து, சிறுமியின் குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பை வழங்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு தொடர்பாக ஜம்மு காஷ்மீர் மாநில அரசு பதிலளிக்க வேண்டும் என தெரிவித்தனர். வழக்கு வரும் 27-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. #JusticeForAshifa #TamilNews