தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பெண் டாக்டர் கற்பழித்து கொலை செய்யப்பட்டார். அவரது உடலை தீவைத்து எரித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 4 வாலிபர்கள் கடந்த 6-ந்தேதி என்கவுண்டரில் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
என்கவுண்டர் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு வக்கீல்கள் ஜி.எஸ்.மணி, பிரதீப்குமார் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்தனர். அதில், என்கவுண்டர் குறித்து ஐதராபாத் போலீஸ் கமிஷனர் சஜ்ஜனார் உள்ளிட்ட போலீசார் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் இச்சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வு குழு அல்லது வெளிமாநில சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு நேற்று தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே, நீதிபதிகள் எஸ்.அப்துல் நசீர், சூரிய காந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி கூறும் போது, 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் குறித்து முன்னாள் நீதிபதி தலைமையிலான குழு விசாரணை நடத்தும் என்றும் இந்த குழுவை இன்று சுப்ரீம் கோர்ட்டு அமைக்கும் என்றும் தெரிவித்தார்.
மேலும் தலைமை நீதிபதி கூறும்போது, இச்சம்பவம் தொடர்பாக தெலுங்கான ஐகோர்ட்டு விசாரித்து வருவது தங்கள் கவனத்தில் உள்ளது. ஆனாலும் ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்படும் என்றார்.
இதற்காக முன்னாள் நீதிபதி வி.எஸ். சிர்பூர்கர் தலைமையில் 3 பேர் குழுவை அமைத்தது. இக்குழுவில் சி.பி.ஐ. முன்னாள் இயக்குனர் கார்த்திகேயன், முன்னாள் நீதிபதி ரேகா பிரகாஷ் ஆகியோர் இடம் பெறுவார்கள் என்றும் இக்குழு ஐதராபாத்தில் இருந்தபடி விசாரணை நடத்தும் என்று அறிவித்தது.