செய்திகள்

சீக்கிய கலவர வழக்கை விசாரிக்க முன்னாள் நீதிபதி தலைமையில் சிறப்பு விசாரணை குழு

இந்திரா காந்தி படுகொலையை அடுத்து நடத்த சீக்கியர்களுக்கு எதிரான வன்முறையில் பதிவான 186 வழக்குகளை மீண்டும் விசாரிக்க முன்னாள் நீதிபதி திங்காரா தலைமையில் 3 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

மாலை மலர்

புதுடெல்லி:

இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி, கடந்த 31-10-1984-ம் அன்று டெல்லியில் உள்ள தனது வீட்டில் சீக்கிய பாதுகாவலர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

அந்த படுகொலைக்குப்பிறகு சீக்கியர்களுக்கு எதிராக நாடு முழுவதும் வன்முறை வெறியாட்டங்கள் நடந்தன. இதில் 3,325 சீக்கியர்கள் பலியாகினர். ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்தனர். அவர்களுக்கு சொந்தமான பலநூறு கோடி ரூபாய் மதிப்புள்ள உடைமைகள் சூறையாடி, சேதப்படுத்தப்பட்டன. இந்த வன்முறை தொடர்பாக பல்வேறு நீதிமன்றங்களில் நடைபெற்றுவந்த 241 வழக்குகளும் முடித்து வைக்கப்பட்டன.

இவற்றில் 186 வழக்குகள் உரிய விசாரணை நடத்தாமலேயே முடித்து வைக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டின்கீழ், இது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை சமர்பிப்பதற்காக கண்காணிப்பு குழு ஒன்றை சுப்ரீம் கோர்ட் நியமித்தது.

இந்த குழு சமர்ப்பித்த அறிக்கையை இன்று ஆய்வு செய்த சுப்ரீம் கோர்ட் மேற்படி 186 வழக்குகளையும் மீண்டும் விசாரிக்க தீர்மானித்துள்ளது. இந்த விசாரணையை மேற்பார்வையிட முன்னாள் ஐகோர்ட் நீதிபதி, ஒரு போலீஸ் உயரதிகாரி, மற்றும் ஓய்வுபெற்ற ஒரு போலீஸ் அதிகாரி தலைமையில் சிறப்பு விசாரணை குழு ஒன்றை சுப்ரீம் கோர்ட் அமைக்க இருந்தது.

இந்த சிறப்பு விசாரணைக்குழுவில் முன்னாள் ஐகோர்ட் நீதிபதி திங்காரா, முன்னாள் ஐ.ஜி ராஜ்தீப் சிங் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரி அபிஷேக் துலார் ஆகிய மூவர் இடம்பெறுவதாக சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது.

186 வழக்குகளையும் உரிய விசாரணை செய்து இரண்டு மாதங்களில் முடிக்க இந்த குழுவுக்கு கால அவகாசம் வழங்கிய நீதிபதிகள் வழக்கை மார்ச் மாதத்திற்கு ஒத்தி வைத்தனர்.