செய்திகள்

அதிகாலை 5 மணியில் இருந்து வாக்குப்பதிவு கோரிய மனு - சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

சுட்டெரிக்கும் கோடைக்காலம், முஸ்லிம்களின் நோன்பு காலம் என்பதால் பாராளுமன்ற இறுதிக்கட்ட தேர்தலில் அதிகாலை 5.30 மணியில் இருந்து வாக்குப்பதிவு நடத்தக் கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.

மாலை மலர்

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. நேற்றுடன் ஆறுகட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில் பொதுவாக வாக்குப்பதிவு நேரமானது காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 வரை என அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் எதிர்வரும் அனைத்து தேர்தல்களும் வாக்குப்பதிவு நேரத்தை அதிகாலை 5.30 மணியில் இருந்து தொடங்குமாறு தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும் என்று வழக்கறிஞர் நிஜாமுதீன் பாட்ஷா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில், இவ்வழக்கு நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, சஞ்சீவ் கண்ணா ஆகியோரை கொண்ட சுப்ரீம் கோர்ட்டின் விடுமுறைக்கால அமர்வின் முன்னர் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

வாக்குப்பதிவுக்கான நேரத்தை முன்கூட்டியே அதிகாலை என்று மாற்றினால் தேர்தல் அலுவலர்களின் போக்குவரத்து தொடர்பான சிரமங்கள் நேரிடும் என்பதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், காலை 7 மணி என்பது வெயில் குறைவாக உள்ள நேரம். அதேபோல் மாலை 6 மணிவரை வாக்களிக்க வாய்ப்புள்ளது என்பதை குறிப்பிட்டு இந்த வழக்கை தள்ளுபடி செய்வதாக தெரிவித்தனர்.