சுப்ரீம் கோர்ட், டெல்லி 
செய்திகள்

வழக்கறிஞர்களுக்கு மட்டுமே அனுமதி - அவசர வழக்குகளை மட்டும் விசாரிக்க சுப்ரீம் கோர்ட் முடிவு

கொரோனா வைரஸ் பீதி தலைவிரித்தாடும் நிலையில் அவசர வழக்குகளை மட்டும் விசாரிக்க தீர்மானித்துள்ள சுப்ரீம் கோர்ட், விசாரணைகளில் வழக்கறிஞர்களுக்கு மட்டுமே அனுமதி என்றும் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி:

இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. சுமார் 30 ஆயிரம் பேர் கொரோனா வைரஸ் கண்காணிப்பில் இருக்கிறார்கள்.

இதையடுத்து, கொரோனா வைரசை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மாநில அரசுகளும் மருத்துவ பரிசோதனைகளை உடனுக்குடன் செய்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அதிகளவில் ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப முக்கிய விழாக்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.

தற்போது பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்த கூட்டத் தொடரை ஏப்ரல் மாதம் 3-ந்தேதி வரை நடத்த முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது.

இதற்கிடையே, நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பீதி அதிகரித்து வருவதால் பாராளுமன்ற கூட்டத்தொடரை முன் கூட்டியே முடித்துவிட சபாநாயகர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

அனைத்துக் கட்சி தலைவர்களுடன் இது தொடர்பாக கருத்துக்கள் கேட்கப்பட்டு வருகின்றன. எனவே,அடுத்த வாரம் மட்டும் பாராளுமன்ற கூட்டத்தொடர் நடக்கும் என்று தெரிகிறது.

20-ந்தேதியுடன் பாராளுமன்ற கூட்டத் தொடரை நிறைவு செய்ய முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

இந்நிலையில், அவசர வழக்குகளை மட்டும் விசாரிக்க தீர்மானித்துள்ள சுப்ரீம் கோர்ட், விசாரணைகளில் வழக்கறிஞர்களுக்கு மட்டுமே அனுமதி என இன்று தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, சுப்ரீம் கோர்ட் இன்று மாலை வெளியிட்ட ஒரு அறிவிக்கையில், ‘இந்திய அரசாங்கம் மற்றும் பொது சுகாதாரத்துறை நிபுணர்கள் வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்களை ஆய்வு செய்து பார்க்கையில், வழக்கு தொடர்ந்தவரகள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள், பாதுகாப்பு பணியாளர்கள், சட்டத்துறை மாணவர்கள் மற்றும் ஊடகத்துறை பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, வரும் 16-ம் தேதி முதல் தேவைப்படும் அளவிலான அமர்வுகளை (பெஞ்ச்) வைத்து அவசர வழக்குகளை மட்டுமே விசாரணைக்கு ஏற்பது என இந்த நீதிமன்றத்தால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணைகளின்போது வழக்கறிஞர் மற்றும் சில முக்கியமான பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்யும் பட்சத்தில் வழக்கறிஞருடன் அவருடைய ஒரேயொரு கட்சிக்காரர் மட்டும் நீதிமன்ற விசாரணை அறைக்குள் அனுமதிக்கப்படுவார்கள்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.