உச்ச நீதிமன்றம் மற்றும் தலிபான் பயங்கரவாதிகள் (கோப்பு படம்) 
செய்திகள்

'தலிபான் பாணி நீதி' நீதிமன்றங்களை பயனற்றதாக்கிவிடும் - கபில் சிபல் வேதனை

தலிபான் பாணியிலான நீதி என்பது இந்தியாவில் நீதிமன்றங்களை பயனற்றதாக்கிவிடும் என மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி:

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் பெண் டாக்டர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் 4 பேரும் போலீசாரிடம் இருந்து தப்பிச்செல்ல முயன்றபோது என்கவுண்டர் செய்யப்பட்டனர். 

இந்த என்கவுண்டருக்கு ஆதரவாகவும், எதிராகவும் என இருவேறு கருத்துக்கள்  நாடுமுழுவதும் நிலவிவருகிறது.

இந்நிலையில், ஐதராபாத் என்கவுண்டர் குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் சுப்ரீம் கோர்ட் மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

''ஐதராபாத் என்கவுண்டரை கொண்டாடும் நபர்களுக்கு நான் தெரிவிப்பது என்னவென்றால், இது ரத்த தாகத்துக்கும் சட்ட நடைமுறைக்கும் இடையே நடக்கும் போராட்டம். 

நாகரீக சமூக நீதி அமைப்பில் தலிபான் பயங்கரவாத பாணி நீதி வழங்குதல் நீதிமன்றங்களை அவசியம் அற்றதாக்கிவிடும்’’ என தெரிவித்தார்.   

ஆப்கானிஸ்தானில் செயல்பட்டுவரும் தலிபான் பயங்கரவாத அமைப்பு அந்நாட்டின் சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு தனி அரசாங்கம் நடத்திவருகிறது. 

தங்கள் ஆட்சியமைப்புக்கு கட்டுப்பட மறுக்கும் பொதுமக்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.