செய்திகள்

ஏமனில் சவுதி கூட்டுப்படையினரின் விமான தாக்குதலில் 17 அப்பாவி பொதுமக்கள் பலி

ஏமன் நாட்டின் சடா மற்றும் டைஸ் பகுதியில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய விமானத் தாக்குதலில் 17 பேர் பரிதாபமாக பலியாகினர். #Yemen #Houthirebels #Saudiledairstrikes

சனா:

ஏமன் நாட்டின் அரசுக்கு எதிராக ஈரானின் ஆதரவுடன் உள்நாட்டு ஹவுத்தி புரட்சிப் படையினர் கடந்த இரண்டாண்டுகளாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் சனா உள்பட பலப்பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்கள் வைத்து அந்த பகுதிகைளை சுற்றி சோதனைச் சாவடிகள் அமைத்துள்ளனர்.

சர்வதேச ஆதரவு பெற்றுள்ள ஏமன் அரசுக்கு சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் ஆதரவு அளித்து வருகின்றன. அவர்கள் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து விமான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் சில நேரங்களில் அப்பாவி பொதுமக்களும் கொல்லப்படுகின்றனர்.

இந்நிலையில், ஏமனின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள சடா நகரில் ஹவுத்தி புரட்சிப் படையினரை குறிவைத்து சவுதி கூட்டுப்படைகள் நேற்று விமானத் தாக்குதல் நடத்தினர். இதேபோல தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள டைஸ் நகரிலும் சவுதி கூட்டுப்படைகள் விமானத் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல்களில் பெண்கள், குழந்தைகள் உட்பட 17 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர்.

மத்திய கிழக்கு நாடுகளான ஏமன், சிரியா, ஈராக் மற்றும் லெபனானில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட ஈரான் மற்றும் சவுதி அரேபியா நாடுகள் முயற்சித்து வருகின்றன. அரசுப் படைகளுடன் புரட்சிப் படையினர் நடத்திவரும் மோதலில் இதுவரை பத்தாயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #Yemen #Houthirebels #Saudiledairstrikes #tamilnews