ரியாத்:
சவூதி அரேபியாவில் இளவரசர் முகமது பின் சல்மானின் பொருளாதார மற்றும் சமூக சீர்திருத்தம் தொடர்பான நடவடிக்கைகளுக்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. அதே நேரத்தில் இஸ்லாமிய நாடான சவூதியில் அந்நிய கலாச்சாரங்களை புகுத்தி வருவதாகவும் அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. மேலும், மேற்கத்திய நாடுகளுடனான உறவை வலுப்படுத்தும் அவரது வழிமுறைகளில் குறைபாடுகள் இருப்பதாகவும் பலர் விமர்சிக்கின்றனர்.
இந்நிலையில், அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஊழல் ஈடுபடுவது உள்ளிட்ட பல்வேறு விமர்சனங்களை பிரபல மதகுரு சபர் அல்-ஹவாலி முன்வைத்து வந்தார். இதையடுத்து, மதகுருமார்கள் மற்றும் உரிமை தொடர்பாக பிரச்சாரம் செய்பவர்கள் மீது வன்முறையை தூண்டுவதாக சபர் அல்-ஹவாலி மற்றும் அவரது மகன்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், சபர் அல்-ஹவாலி அரசியல் காரணங்களுக்காக கைது செய்யப்படவில்லை எனவும், வன்முறையை தடுக்கவே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால் இதுதொடர்பாக லண்டனை மையமாக கொண்டுள்ள சவூதி அமைப்பான ஏ.எல்.கியூ.எஸ்.டி, சவூதி ராஜ குடும்பத்தின் மோசமான நிலை குறித்து புத்தகம் ஒன்றை வெளியிட்டதாகவும், அதன் பின்னரே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. #SaudiArabia