சென்னை:
தமிழகம் முழுவதும் ஜனவரி 4,5,11,12 ஆகிய தேதிகளில் 67 ஆயிரத்து 687 வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம், திருத்தம் செய்ய இதுவரை 17 லட்சத்து 1 ஆயிரத்து 662 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இதில் புதிதாக பெயர் சேர்க்க 13 லட்சத்து 16 ஆயிரத்து 921 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.
இதில் அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 89 ஆயிரத்து 454 பேரும், குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 9 ஆயிரத்து 439 பேரும் விண்ணப்பம் செய்துள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களும், இதர பணி நாட்களில் பெறப்படும் விண்ணப்பங்களும் நாளை முதல் பரிசீலிக்கப்பட உள்ளது. அதன்பின், இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 14-ம் தேதியன்று வெளியிடப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.