ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரஜினியின் 70-வது பிறந்தநாள் விழாவையொட்டி 300 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்னர், ரஜினியின் அண்ணன் சத்யநாராயண ராவ் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் நல்ல தலைமைக்கான வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார். அவருக்கு மக்கள் பலம் மற்றும் ஆசீர்வாதம் உள்ளது.
மேலும் அவர் பெண்கள் மீது அதிக பாசம் கொண்டவர், தமிழக மக்கள் ரஜினியை, அப்பாவாக, தாத்தாவாக, சகோதரராக பார்த்து வருகிறார்கள். அனைவருக்கும் நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு வந்துள்ளது. அதற்கான முயற்சிகளையும் அவர் செய்து வருகிறார். மக்கள் அவருக்கு வாய்ப்பளித்து, ஆசி வழங்கினால் அவர் நல்லதே செய்வார்.
உள்ளாட்சி தேர்தலில் எந்த கட்சிக்கும் அவர் ஆதரவளிக்க மாட்டார். அவரின் பெயரைக்கூறி யாரும் ஓட்டு சேகரிக்க மாட்டார்கள். ரஜினியும், கமலும் தேவையான நேரத்தில் இணைவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.