செய்திகள்

சத்தியமங்கலம் காப்பகத்தில் புலிகள் எண்ணிக்கை 60 ஆக உயர்வு - கணக்கெடுப்பு பணியில் தகவல்

சத்தியமங்கலம் காப்பகத்தில் புலிகள் எண்ணிக்கை தற்போது 60 ஆக உயர்ந்திருக்கிறது என்று ஈரோடு மாவட்ட வன அலுவலர் அருண் லால் கூறினார்.

மாலை மலர்

சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் வன விலங்குகளின் கணக்கெடுப்பு முகாம் நடந்தது.

ஒவ்வொரு பகுதிகளுக்கும் 6 பேர் கொண்ட தனிக்குழுவினர் காட்டுக்குள் சென்று விலங்குகளின் கால் தடம் அதன் எச்சம் மற்றும் நடமாட்டம் ஆகியவற்றை கண்காணித்து இந்த கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த கணக்கெடுப்பின் போது புலிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து உள்ளது. ஆரம்பத்தில் 10 புலிகளாக இருந்த எண்ணிக்கை 20 புலிகளாக உயர்ந்து பிறகு 30 ஆக உயர்ந்து 40 ஆக உயர்ந்து தற்போது 60 ஆக உயர்ந்திருக்கிறது.

இது பற்றி ஈரோடு மாவட்ட வன அலுவலர் அருண் லால் கூறும் போது, ‘‘ஈரோடு மாவட்ட வனப்பகுதியில் வன விலங்குகளின் கணக்கெடுப்பு முடிந்து உள்ளது. இதில் தற்போது புலிகள் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்திருப்பது தெரிய வந்துள்ளது.

இதே போல் மற்ற விலங்குகளின் எண்ணிக்கையும் உயர்ந்து உள்ளது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்ட பிறகு புலிகள் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது. வனப்பகுதி வாழ் மக்களும் வனத்துறையினருக்கு போதிய ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்கள்’’ என்று கூறினார்.