மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில், சென்னை செம்மஞ்சேரியில் உள்ள சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் மென்பொருள் உருவாக்கும் போட்டியான ‘ஸ்மார்ட் இந்தியா ஹேக்கதான் 2019’ நடைபெற்றது. இதில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட, திறமையான மாணவர்கள் கலந்துகொண்டனர்.
நாடு முழுவதும் 48 ஒருங்கிணைப்பு மையங்களில் நடைபெற்ற இறுதி போட்டிகளில் சுமார் 10,500-க்கும் அதிகமான பொறியியல் மாணவர்கள் 1373 குழுக்களாக பங்கேற்றனர். தமிழகத்தில் மட்டும் ஆறு ஒருங்கிணைப்பு மையங்கள் மட்டும் அமைக்கப்பட்டன.
பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு திட்டமான ‘டிஜிட்டல் இந்தியா மிஷன்’ திட்டத்தை மேன்படுத்தி, பெருமை சேர்க்கும் வகையில் இந்த மின்னணு மென்பொருள் உருவாக்கும் போட்டி வருடந்தோறும் நடத்தப்படுகிறது. இதனை கடந்த இரண்டாம் தேதி மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் நாடு முழுவதும், காணொலி காட்சி மூலம் துவக்கி வைத்தார். சத்யபாமா நிகர்நிலை பல்கலை.யில் நாஸ்காம் இயக்குனர் ஸ்ரீகாந்த் ஸ்ரீனிவாசன் தொடங்கி வைத்து மாணவர்களை வாழ்த்தினார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியாளர் பொன்னையா, இந்திய உள்நாட்டு விமான போக்குவரத்து அமைச்சகத்தின் இணை செயலாளர் உஷா பதி, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் துணை ஆணையர் முத்து மாணிக்கம் உள்ளிட்டோர், நிறைவு விழாவில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினர்.