பெங்களூரு:
தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா, கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ந் தேதி மரணம் அடைந்தார். அவர் மரணம் அடைந்து கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதியுடன் ஓராண்டு நிறைவடைந்தது. இதையடுத்து ஜெயலலிதா மரணம் அடைந்து ஓராண்டு நினைவு தினத்தில் இருந்து பெங்களூரு சிறையில் சசிகலா மவுனம் விரதம் மேற்கொண்டார்.
அதன் பிறகு டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ., சசிகலாவை பலமுறை நேரில் சந்தித்து பேசினார். ஆனால் சசிகலா பேசவில்லை. வெறும் சைகை மூலமாக மட்டுமே பேசியதாக டி.டி.வி.தினகரன் கூறினார். நேரில் ஆஜராகும்படி வருமான வரித்துறை மூலம் சசிகலாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சசிகலா, தான் மவுன விரதத்தில் இருப்பதாகவும், தன்னால் ஆஜராக இயலாது என்றும் கூறினார்.
இந்த நிலையில் சிவராத்திரி தினத்தையொட்டி சசிகலா தனது மவுன விரதத்தை நேற்றுடன் முடித்துக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 2017-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி முதல் நேற்று வரை அவர் 70 நாட்கள் மவுன விரதம் இருந்துள்ளார். தற்போது அவர், இளவரசியுடன் வழக்கம்போல் அவர் பேசத்தொடங்கி இருப்பதாக சிறை வட்டாரங்கள் தெரிவித்தன.