அவனியாபுரம்:
தினகரன் அணியை சேர்ந்த சசிகலா புஷ்பா எம்.பி. மதுரை விமான நிலையத்தில் இன்று நிருபர் களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் பஸ் கட்டண உயர்வுக்கு முதல்வர் விளக்கம் அளித்துள்ளார், போக்குவரத்து கடனை தீர்க்க ஆட்சியாளர்கள் மக்களிடம் பணம் வாங்கித்தான் சரிசெய்ய வேண்டுமா? வேறு வழிகளில் சரி செய்ய, ஆலோசனை கூற அறிவார்ந்த அமைச்சர்கள் இல்லையா?
ரூ.10 கோடி கடனை தீர்க்க மக்கள் படும் கஷ்டம் என்ன என்பதை ஆராய்ச்சி செய்து பார்ப்பது தான் அறிவார்ந்த அரசியல். கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது கைது நடவடிக்கை எடுத்திருப்பது துரதிருஷ்டவசமானது.
தினகரன் அணியினரின் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா நிகழ்ச்சிக்கு தடை ஏற்படுத்துவது அராஜக அரசியல் ஆகும். எம்.ஜி. ஆரின் பெயரை சொல்லி இட்டை இலை சின்னம் வைத்திருந்தால் மட்டும் தகுதி ஆகிவிடாது. எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழாவிற்கு எதிர்க்கட்சி போன்று சுவர் விளம்பரம் செய்ய தடை ஏற்படுத்துவது, எதிரி அரசியல் பகை உணர்வாக உள்ளது.
இதனை மக்களும், தொண்டர்களும் பார்த்து கொண்டுள்ளனர். அனைவரும் தினகரன் பக்கம்தான் உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார். #tamilnews #sasikalapushpa #busfare