நாமக்கல்:
நாமக்கல், மோகனூர் ரோடு, கோ-அப்ரெட்டிவ் காலனியில் வசித்து வருபவர் செந்தில். (வயது 45). வக்கீல்.தினகரன் ஆதரவாளர் ஆவார்.
சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக சசிகலா தரப்பில் ஆஜராகி வாதாடி வந்தார். இவர் சமீபகாலமாக கட்சி நிகழ்ச்சிகள் மற்றும் வழக்கு தொடர்பாக ஆஜராகாமல் ஒதுங்கி இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இவது வீட்டுக்கு இன்று காலை சுமார் 6 மணி அளவில் கோவை மற்றும் நாமக்கல் வருமான வரிதுறை அதிகாரிகள் 6 பேர் கொண்ட குழுவினர் காரில் வந்தனர்.
வீட்டுக்குள் அதிகாரிகள் சென்றவுடன் வெளி நபர்கள் யாரும் உள்ள வந்து விடாமல் இருப்பதற்காக உடனடியாக வீட்டின் காம்பவுண்டு கதவு பூட்டப்பட்டது. பின்னர் வீட்டில் இருந்த செந்தில் குடும்பத்தினரிடம், நாங்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் என்றும், வருமானம் தொடர்பாக விசாரணை மற்றும் சோதனை நடத்த வேண்டும். இதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டுக் கொண்டனர். மேலும் அடையாள அட்டையும் காண்பித்தனர்.
அதன் பின்னர் வீட்டின் அறை, அறையாக அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். மேல் மாடிக்கு சென்றும் சோதனை நடத்தினார்கள். சாக்கு மூட்டைகள், பிரோ உள்ளிட்டவைகளில் இருந்த ஆவணங்களை சோதனையிட்டனர். பெரிய பங்களா வீடு என்பதால் இந்த சோதனை காலை 9.45 மணி வரை நீடித்தது. 9.45 மணி அளவில் வீட்டில் இருந்து வெளியே வந்த அதிகாரிகள் உடனடியாக காரில் ஏறி புறப்பட்டு சென்றனர்.
வருமான வரித்துறை சோதனைக்கு உள்ளான செந்தில் ஜெயலலிதா- சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் முக்கிய வழக்கறிஞராக செயல்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய இந்த சோதனை நாமக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.