செய்திகள்

சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்யவேண்டும் - சரத்குமார் வலியுறுத்தல்

தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகளின் நேரடி ஒளிபரப்பு குறித்து உடனடியாகப் பரிசீலித்து தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் வலியுறுத்தி உள்ளார்.

மாலை மலர்

சென்னை:

சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நாடாளுமன்ற அவைகளின் நிகழ்வுகளையும், ஆந்திரா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களின் சட்டமன்ற நிகழ்வுகளையும், நேரடி ஒளிபரப்பு செய்வது போன்று, தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகளையும் நேரடி ஒளிபரப்பு செய்யவேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன். சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகள், விவாதங்கள் போன்றவை பொதுமக்களுக்கு தெரியவரும்.

அதேவேளை எதிர்க்கட்சிகளின் அமளிகள், அவசியமற்ற வெளி நடப்புகள் போன்றவையும் வெளிச்சத்திற்கு வரும். தங்களுடைய தொகுதிகளின் சட்டமன்ற உறுப்பினர்களின் பேரவை செயல்பாடுகளையும் மக்கள் அறிந்துகொள்ள ஏதுவாகும். எனவே பேரவை நிகழ்வுகளின் நேரடி ஒளிபரப்பு குறித்து உடனடியாகப் பரிசீலித்து தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.