சங்ககிரி:
சங்ககிரி பச்சக்காடு பகுதியை சேர்ந்தவர் சங்கர்பாபு (வயது 34). இவர் சங்ககிரி வெள்ளிவிழா கட்டிடத்தின் அருகில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் இவர் சம்பவத்தன்று மதியம் 2.30 மணிக்கு நிதி நிறுவனத்தை பூட்டி விட்டு வீட்டுக்கு சாப்பிட சென்றார். பின்னர் மாலை 5 மணிக்கு வந்த போது, நிறுவனத்தின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் அங்கு பீரோவில் இருந்த ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்து 330 திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து நிதி நிறுவனத்தில் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.