ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் கடந்த ஏப்ரல் மாதத்தில் நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பெண்களுக்கான பளுதூக்குதலில் 53 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை சஞ்சிதா சானு தங்கப்பதக்கம் வென்றார். மணிப்பூரை சேர்ந்த சஞ்சிதா சானு காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் வென்ற 2-வது தங்கப்பதக்கம் இதுவாகும்.
இந்த நிலையில் சஞ்சிதா சானுவிடம் போட்டி இல்லாத நேரத்தில் நடத்தப்பட்ட ஊக்க மருந்து பரிசோதனையில் அவர் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தி இருப்பது தெரியவந்ததாகவும், இதனால் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டு இருப்பதாகவும் சர்வதேச பளுதூக்குதல் சம்மேளனம் நேற்று முன்தினம் தெரிவித்தது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடந்த உலக பளுதூக்குதல் போட்டிக்கு முன்பாக நடத்தப்பட்ட ஊக்க மருந்து சோதனையில் தான் சஞ்சிதா சானு தோல்வி அடைந்து இருப்பதாக தெரிய வந்துள்ளது.