செய்திகள்

மணல் கொள்ளை - ஆந்திர அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்து பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

கிருஷ்ணா நதியில் மணல் கொள்ளை நடந்தது தொடர்பாக ஆந்திர அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. #AndhraPradesh #KrishnaRiver

நகரி:

விஜயவாடாவில் உள்ள ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு வீடு அருகே கிருஷ்ணா நதியில் தினமும் மணல் கொள்ளை நடந்து வந்தது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர்.

இதுகுறித்து ‘தண்ணீர் மனிதன்’ ராஜேந்திர சிங், அனுமோலு காந்தி ஆகியோர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு புகார் அனுப்பினர். தேசிய பசுமை தீர்ப்பாயம், அதிகாரிகள் குழுவை அனுப்பி கிருஷ்ணா நதியில் சோதனை மேற்கொண்டது. அப்போது மணல் கொள்ளை நடந்தது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து ஆந்திர அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்ததுடன், கிருஷ்ணா நதியில் மணல் அள்ளுவதை முழுமையாக தடை செய்ய வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. அபராத தொகையை மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் கணக்கில் சேர்த்து மாசு கட்டுப்பாட்டுக்காக மட்டுமே செலவிட வேண்டும் என தலைமை செயலாளருக்கு உத்தரவிடப்பட்டது. மேலும் இந்த வழக்கு விசாரணை ஜூலை 23-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. #KrishnaRiver #AndhraPradesh #ChandraBabuNaidu #NGT

SCROLL FOR NEXT