செய்திகள்

சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி ராஜினாமா

அதிக நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறி சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி ஓ-ஹ்யூன் குவான் தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளார்.

மாலை மலர்

சியோல்:

சாம்சங் எலக்ட்ரானிக்சின் மூன்று இணை தலைமை நிர்வாக அதிகாரிகளில் ஓ-ஹ்யூன் குவான் மிக முக்கியமானவர். இவர் கடந்த 32 ஆண்டுகளாக இந்நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். சாம்சங் நிறுவனத்தின் நிர்வாக குழு கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. அப்போது பதவிவிலகுவது குறித்து குவான் அறிவித்தார்.

பதவிவிலகுவது பற்றி நீண்ட நாட்களாக சிந்தித்து வந்தேன், இதற்கு மேலும் அதனை தள்ளிப்போட முடியாது. முன்னெப்போதும் ஏற்படாத நெருக்கடியை எதிர்கொண்டுள்ளோம். இந்த நிறுவனம் புதிய தொடக்கம் காண வேண்டிய தருணம் வந்துவிட்டது என்று நம்புகிறேன். தகவல் தொடர்பு தொழில்துறை மிக விரைவாக மாறி வருவதால் புதிய சவால்களுக்கு சிறந்த முறையில் பதிலளிப்பதற்கு இளம் தலைமை அவசியம்" என்று அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

2018-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை ஓ-ஹ்யூன் குவான் சாம்சங் எலக்ட்ரானிக்சின் நிர்வாக குழுவில் இருப்பார் என கூறப்படுகிறது. அடுத்த தலைமை நிர்வாக அதிகாரி கூடிய விரைவில் நியமிக்கப்படுவார் என சாம்சங் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் சாம்சங் குழுமத்தின் வாரிசு லீ ஜெ-யோங், லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.