சேலம்:
அரசு டாக்டர்களுக்கு காலம் சார்ந்த பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். பட்ட மேற்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 10-ந்தேதியில் இருந்து தற்போது வரை தர்ணா, உண்ணாவிரதம், மனித சங்கிலி உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை டாக்டர்கள் நடத்தி வந்தனர். ஆனால், இவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.
இதனால் அரசு மருத்துவ மனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி புரியும் டாக்டர்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர்.
அதன்படி இன்று காலை சேலம் அரசு ஆஸ்பத்திரி மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள தாலுகா மருத்துவமனை டாக்டர்கள், ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று காலை சிகிச்சை பெற வந்த நோயாளிகள் புறநோயாளிகள் பிரிவில் டாக்டர்கள் இல்லாததால்சிகிச்சை பெற முடியாமல் தவித்தனர்.
இதில் ஆபரேசன் தியேட்டர், மகப்பேறு பிரிவு, குழந்தைகள் சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட முக்கிய பிரிவுகளில் டாக்டர்கள் பணியில் இருந்தனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் பணியாற்றும் டாக்டர்களில் 90 சதவீதம் பேர் பணியை புறக்கணித்துள்ளதாக அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இதைபோல், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் பெரும்பாலான டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர். மாவட்டம் முழுவதிலும் சுமார் 300-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டதாக சங்க நிர்வாகிகள் கூறினர்.