செய்திகள்

கட்சி தலைமைக்கு பா.ஜனதா எம்.பி. மிரட்டல் கடிதம்

பாராளுமன்ற தேர்தலில் தனக்கு சீட் தராவிட்டால் கடுமையான பின்விளைவுகள் ஏற்படும் என்று பாண்டேவுக்கு பா.ஜனதா எம்.பி. சாக்‌ஷி மகாராஜ் கடிதம் எழுதியுள்ளார். #BJP #SakshiMaharaj

லக்னோ:

உத்தரபிரதேச மாநிலம் உன்னா தொகுதி பா.ஜனதா எம்.பி. சாக்‌ஷி மகாராஜ். இவர் சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசக்கூடியவர். வருகிற பாராளுமன்ற தேர்தலில் உன்னா தொகுதியில் மீண்டும் போட்டியிட தனக்கு ‘சீட்’ கேட்டு, உத்தரபிரதேச மாநில பா.ஜனதா தலைவர் மகேந்திரநாத் பாண்டேவுக்கு அவர் ஒரு கடிதம் எழுதி உள்ளார்.

அதில், தனக்கு சீட் தராவிட்டால் கடுமையான பின்விளைவுகள் ஏற்படும் என்று பாண்டேவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் அவர் கூறியுள்ளார்.

அந்த கடிதத்தில், “உன்னா தொகுதியில் பெரும்பான்மையாக இருக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களின் ஒரே பிரதிநிதி நான்தான். இந்த தொகுதியின் வளர்ச்சிக்காக நிறைய பணிகள் செய்துள்ளேன். கட்சி வேறுவிதமான முடிவு எடுத்தால், கோடிக்கணக்கான தொண்டர்கள் அதிர்ச்சி அடைவார்கள். அதனால் தேர்தல் முடிவு சாதகமாக அமையாது” என்று சாக்‌ஷி மகாராஜ் கூறியுள்ளார். #BJP #SakshiMaharaj

SCROLL FOR NEXT