மும்பை:
மராட்டிய மாநிலம் நாக்பூர் நகரில் 82-வது தேசிய சீனியர் பேட்மிண்டன் போட்டிகள் நடந்து வருகின்றன. இன்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதி போட்டியில் பி.வி.சிந்துவும் சாய்னா நேவாலும் மோதினர்.
ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரண்டு வீராங்கனைகளும் சிறப்பாக விளையாடினர். ஒவ்வொரு பாய்ண்டுக்கும் இருவரும் தீவிரமாக போராடினர். ஆனாலும், முதல் செட்டின் இறுதியில் சாய்னா நேவால் 21 - 17 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தினார்.
இதையடுத்து, இரண்டாவது செட் தொடங்கியது. இதிலும் இரண்டு பேரும் தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர். சாய்னா நேவால் பாய்ண்ட் எடுத்த அடுத்த நிமிடம் பிவி சிந்துவும் அற்புதமாக விளையாடி பாய்ண்ட் எடுத்து வந்தார். இதனால் இரண்டாவது செட் எளிதில் முடியவில்லை.
இறுதியில், 27 -25 என்ற கணக்கில் சாய்னா நேவால் வென்றார். இதைத்தொடர்ந்து, 21 -17, 27 -25 என்ற நேர் செட்களில் சிந்துவை வீழ்த்தி சாய்னா நேவால் சாம்பியன் பட்டம் வென்றார். இது இவரது மூன்றாவது பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.