கோத்தகிரி:
ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு பெங்களூர் கோர்ட்டில் நடைபெற்று வந்த போது கடந்த 2011-ல் ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அப்போது சசிகலா வெளியேற்றப்பட்டார் ஒரு மாதம் அவர் ஜெயலலிதாவுடன் தொடர்பில் இல்லாமல் இருந்து வந்தார். கொட நாடு எஸ்டேட்டிற்குள்ளும் சேர்க்கப்படவில்லை.
இந்த நிலையில் கொடநாட்டில் உள்ள கர்சன் கிரீன் டீ எஸ்டேட் ஏலம் தொடர்பான தகவல் சசிகலா குடும்பத்தினருக்கு தெரிய வந்தது. கோத்தகிரி உள்பட நீலகிரி பகுதியில் அவர்கள் எஸ்டேட் வாங்க வேண்டும் என முடிவு செய்தனர். அதை திவாகரன் மூலமாக வாங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
இது தவிர தாய் சோலையில் உள்ள 1200 ஏக்கர் பரப்பிலான ஒரு எஸ்டேட், 750 ஏக்கர் பரப்பிலான எடக்காடு பகுதியில் உள்ள எஸ்டேட் ஆகியவற்றை வாங்கவும் சசிகலா குடும்பத்தினர் முயற்சி மேற்கொண்டனர்.
ஆனால் கர்சன் கிரீன் டீ எஸ்டேட் மட்டுமே வாங்கும் சூழ்நிலை ஏற்பட்டது. மற்ற எஸ்டேட்டுகளை சில பிரச்சினை காரணமாக அதன் நிர்வாகங்கள் விற்பனை செய்ய முன்வரவில்லை. இந்த நிலையில் ஜெயலலிதா, சசிகலாவுக்குள் இருந்த பிரச்சினைகள் சுமூகமாக முடிந்தது.
அதனால் கொடநாடு எஸ்டேட்டை போலவே ஜெயலலிதா, சசிகலா, இளவரசி ஆகியோர் சேர்ந்து கர்சன் கிரீன் டீ எஸ்டேட்டை கடந்த 2012-ல் வாங்கி உள்ளனர். அதில் சசிகலாவின் குடும்ப உறுப்பினர்கள் சிலரையும் இயக்குனர்களாக சேர்த்து உள்ளனர்.
கர்நாடகாவில் சொத்து குவிப்பு வழக்கு நடைபெற்று வந்த நிலையிலும் கர்சன் கிரீன் டீ எஸ்டேட்டை வாங்கி இருப்பது தெரிய வந்துள்ளது.