ஜாம்நகர்:
குஜராத் மாநிலத்தில், கடந்த 2015-ம் ஆண்டு பணிநீக்கம் செய்யப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சீவ் பட். அவர் 1990-ம் ஆண்டு, ஜாம்நகர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக இருந்தார். அப்போது நடந்த கலவரம் தொடர்பாக, சுமார் 150 பேரை அவர் விசாரணைக்காக பிடித்துச் சென்றார். அவர்களில் ஒருவர் விடுதலை ஆனவுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
காவலில் இருந்தபோது தாக்கியதால்தான் அவர் இறந்ததாக அவருடைய சகோதரர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், சஞ்சீவ் பட் மற்றும் 6 போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் ஜாம்நகர் அமர்வு கோர்ட்டு நேற்று தீர்ப்பு அளித்தது. சஞ்சீவ் பட்டுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி டி.என்.வியாஸ் உத்தரவிட்டார். 6 போலீசாரும் குற்றவாளிகள் என்றும் அவர் தீர்ப்பு அளித்தார்.