செய்திகள்

கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் கவுரவ டாக்டர் பட்டத்தை டெண்டுல்கர் நிராகரித்தார்

கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் கவுரவ டாக்டர் பட்டத்தை கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் நிராகரித்தார். இதை ஏற்க முடியாததற்கான காரணங்களை அவர் இ-மெயில் மூலம் தெரிவித்தார். #SachinTendulkar

கொல்கத்தா:

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்க முடிவு செய்தது.

இது தொடர்பாக பல்கலை கழகம் சார்பில் டெண்டுல்கரை அணுகி கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவது குறித்து தெரிவித்தனர். ஆனால் டாக்டர் பட்டத்தை ஏற்க டெண்டுல்கர் மறுத்துவிட்டார்.

இதுகுறித்து ஜாதவ்பூர் பல்கலைக்கழக துணை வேந்தர் சுரஞ்சன் தாஸ் கூறியதாவது:-

டெண்டுல்கருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க முடிவு செய்யப்பட்டு அவரை அணுகினோம். ஆனால் டாக்டர் பட்டத்தை ஏற்க முடியாததற்கான காரணங்களை இ-மெயில் மூலம் தெரிவித்தார்.

அதில், எந்த ஒரு பல்கலைக்கழகமும் வழங்கும் டாக்டர் பட்டத்தை தான் ஏற்பதில்லை என்றும், ஆக்ஸ் போர்ட்டு பல்கலைக்கழக வழங்கிய பட்டத்தையும் ஏற்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார் என்றார்.

டெண்டுல்கர் டாக்டர் பட்டத்தை நிராகரித்து உள்ளதால் கொல்கத்தா பல்கலைக்கழகம் அதை 5 முறை உலக சாம்பியான குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோமுக்கு வழங்க முடிவு செய்துள்ளது.

டிசம்பர் 24-ந்தேதி நடக்கும் பல்கலை கழகத்தின் 63-வது பட்டம் அளிப்பு விழாவில் டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது. #SachinTendulkar

SCROLL FOR NEXT