சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த செப்டம்பர் மாதம் 28-ந்தேதி உத்தரவிட்டது.
சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு சபரிமலை ஐயப்பன் கோவில் ஆசாரத்திற்கு எதிரானது என்றும், எனவே இந்த உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் எனவும் சுப்ரீம் கோர்ட்டில் ஐயப்ப பக்தர்கள் மறு சீராய்வு மனு தாக்கல் செய்தனர்.
50-க்கும் மேற்பட்டோர் தாக்கல் செய்த மறு சீராய்வு மனுக்களை ஜனவரி மாதம் 22-ந்தேதி விசாரிப்பதாக சுப்ரீம் கோர்ட்டு அறிவித்தது.
அதேநேரம் சபரிமலை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே பிறப்பித்த உத்தரவு அமலில் இருக்கும் என்றும் கூறி விட்டது. இதனால் ஜனவரி 22-ந்தேதி மறுஆய்வு மனுக்கள் விசாரணை நடைபெறும் வரை சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற நிலை ஏற்பட்டது.
இதனால் சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தும் நிலை உருவானது. மண்டல பூஜை, மகரவிளக்கு திருவிழாக்களின் போது அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று உளவு துறையும் எச்சரித்தது.
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதித்தால், அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் இதுவரை செய்யப்படவில்லை. அந்த வசதிகளை சபரிமலையில் ஏற்படுத்தும் வரை பெண்களை அனுமதிக்க கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும் என அந்த மனுவில் கூறியுள்ளனர்.