சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் தரிசனம் செய்ய அனுமதிக்கும்படி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்து அமைப்புகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன.
இது ஒருபுறமிருக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததால் கோவிலுக்கு செல்வதற்கான முயற்சியில் சில பெண்கள் இறங்கினர். அவர்களுடன் சமூக ஆர்வலர்கள், பெண்ணியவாதிகள், செய்தியாளர்கள் என பல்வேறு தரப்பினரும் அங்கு செல்வதற்கு ஆர்வம் காட்டினர். ஐப்பசி மாத பூஜைக்காக கோவில் நடை திறக்கப்பட்டதும் இந்த பெண்கள் கோவிலுக்கு வரத் தொடங்கினர். ஆனால் அவர்களை சபரிமலைப் பாதைகளில் போராட்டக் குழுவினர் தடுத்து நிறுத்தினர்.
அதேசமயம், சபரிமலை கோவிலுக்கு போலீஸ் பாதுகாப்புடன் ரெகானா பாத்திமா புறப்பட்டுச் சென்ற தகவல் மாநிலம் முழுவதும் பரவிய நிலையில், கொச்சியில் உள்ள அவரது வீட்டை இன்று அடையாளம் தெரியாத நபர்கள் அடித்து நொறுக்கினர். வீட்டின் கதவு, ஜன்னல்கள் உடைக்கப்பட்டு பொருட்களும் அடித்து நொறுக்கப்பட்டன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. #Sabarimala #SabarimalaProtests