சபரிமலை தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பு, கேரள மாநிலத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பிட்ட வயது பெண்களை கோவிலுக்குள் அனுமதிக்கக்கூடாது என்றும், உச்ச நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும் இந்து அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக பெண்களும் இப்போராட்டத்தில் அதிக அளவில் பங்கேற்றனர்.
ஐப்பசி மாத சிறப்பு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டதும் போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது. கோவிலுக்கு செல்ல முயன்ற பெண்களை போராட்டக் குழுவினர் தடுத்து வருவதால் பதற்றம் நீடிக்கிறது. சில இடங்களில் வன்முறை ஏற்பட்டதால், போலீசார் தடியடி நடத்தினர். போராட்டம் நடைபெறும் பாதைகளில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.