சபரிமலை அய்யப்பன் கோவில் ஆச்சாரத்தை மீறி அங்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு வெளியானதும் இளம்பெண்கள் பலரும் சபரிமலைக்கு செல்ல முயன்றனர். அவர்களை பக்தர்கள் வழி மறித்து திருப்பி அனுப்பினர்.
பக்தர்களின் எதிர்ப்பை மீறி கடந்த 2-ந்தேதி பிந்து, கனகதுர்கா என்ற 2 இளம்பெண்களை போலீசார் சபரிமலை சன்னிதானம் அழைத்துச் சென்றனர். அங்கு அவர்கள் சாமி தரிசனமும் செய்தனர்.
50 வயதுக்குட்பட்ட இளம்பெண்கள் இருவர் சபரிமலையில் தரிசனம் செய்த தகவல் வெளியானதும், கோவில் நடை அடைக்கப்பட்டு பரிகார பூஜைகள் நடந்தது. மேலும் அய்யப்ப பக்தர்கள், இந்து அமைப்புகள், சபரிமலை கர்மசமிதியை சேர்ந்தவர்கள் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் குதித்தனர்.
இதையொட்டி நடந்த முழு அடைப்பில் பல இடங்களில் வன்முறை வெடித்தது. கடைகள், அலுவலகங்கள், அரசு பஸ்கள் கல்வீசி தாக்கப்பட்டன. கொடிக் கம்பங்களும் உடைக்கப்பட்டன.
கேரளத்தின் தென்பகுதியான நெய்யாற்றின்கரை முதல் வடபகுதியான கண்ணூர் வரை கலவரம் பரவியது. சபரிமலை கோவில் அமைந்துள்ள பத்தினம் திட்டா மாவட்டத்தில் பல இடங்களிலும் கலவரம் மூண்டது. போராட்டக்காரர்களை போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகள் வீசியும் கலைத்தனர்.
வன்முறையில் ஈடுபட்டதாக நேற்றிரவு வரை 1,800 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 5 ஆயிரம் பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சபரிமலை பக்தர்களுக்கு ஆதரவாக நடக்கும் போராட்டத்திற்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் திருவனந்தபுரம், மலையின்கீழ், கண்ணூர், தலச்சேரி, கோழிக்கோடு, ஆலப்புழா நகரங்களில் பதட்டம் நிலவியது.
இப்பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார் மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் ஒரு அணியாகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் இன்னொரு அணியாகவும் பிரிந்து மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இரு அணிகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் வீடுகள் மாறி மாறி தாக்கப்பட்டு வருகிறது. நேற்றிரவு கண்ணூர் மாவட்டம் தலச்சேரி தொகுதியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. ஷம்சீர் வீடு மீது ஒரு கும்பல் வெடிகுண்டுகளை வீசினர். அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இந்த சம்பவத்திற்கு ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங்பரிவார் அமைப்புகளே காரணம் என்று ஷம்சீர் எம்.எல்.ஏ தெரிவித்தார். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கூறினார்.
ஷம்சீர் எம்.எல்.ஏ. வீடு மீது இரவு 10.30 மணிக்கு குண்டு வீசப்பட்டது. இந்த சம்பவம் நடந்த 2 மணி நேரத்தில் தலச்சேரியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் மேல்சபை எம்.பி. முரளீதரனின் மூதாதையர் வீடு முன்பு வெடிகுண்டு வீசப்பட்டது.
ஷம்சீர் எம்.எல்.ஏ. வீடு மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாகவே இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. இதில் ஈடுபட்டவர்கள் கம்யூனிஸ்டு கட்சியினர் என்று பாரதிய ஜனதா குற்றம் சாட்டியது. அங்கு மேலும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மலையின்கீழ் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டுகள்.
அப்போது பள்ளியின் மைதானத்தில் ஒரு சாக்கு மூட்டையில் 4 வெடிகுண்டுகள் இருந்தது. இதுபோல கூரிய கற்கள், ஜல்லி கற்கள் மற்றும் ஆயுதங்களும் சாக்கு மூடைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகளை நிபுணர்கள் செயலிழக்கச் செய்தனர்.