சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் புனரமைப்பு பணிகள் நடைபெறும் முன்பு தேவ பிரசன்னம் பார்த்த பிறகே அந்த பணிகள் தொடங்கும். இதேபோல சபரிமலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேவபிரசன்னம் பார்த்தபோது அங்குள்ள பழமையான கொடிமரம் பழுதடைந்து இருப்பது தெரிய வந்தது.
இதைதொடர்ந்து புதிய தங்க கொடிமரம் அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கியது. முதல் கட்டமாக பத்தனம் திட்டா வனப்பகுதியில் இருந்து பெரிய தேக்கு மரத்தடி விசேஷ பூஜைகளுக்கு பிறகு வெட்டி எடுக்கப்பட்டது.
அந்த மரத்தடி பம்பை கணபதி கோவிலுக்கு கொண்டுவரப்பட்டு அங்கு பெரிய மரத்தொட்டியில் மூலிகை எண்ணையில் மூழ்கி வைக்கப்பட்டது.
இதற்கிடையில் சபரி மலை சன்னிதானத்தில் கொடி மரத்திற்கு தங்க தகடு பதிக்க தேவையான தங்க தகடுகள் தயாரிக்கும் பணியும் மும்முரமாக நடந்து வருகிறது. 9 கிலோ 161 கிராம் தங்கம் மூலம் இந்த தகடுகளை தயாரிக்கும் பணியில் கலைஞர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த நிலையில் வருகிற 1-ந்தேதி தந்திரி கண்டரரும் ராஜீவரு விசேஷ பூஜைகள் நடத்த, மூலிகை தொட்டியில் இருந்து கொடி மரத்தடி வெளியில் எடுக்கப்படுகிறது. அன்றே கொடிமரத்தில் தங்க தகடுகளை பதிக்கும் பணியும் தொடங்கும்.