செய்திகள்

வடகொரிய அதிபரின் சகோதரி வருகை: விருந்தளித்து அசத்த தென்கொரியா முடிவு

குளிர்கால ஒலிம்பிக் போட்டி தொடக்க விழாவுக்கு வந்துள்ள வடகொரிய அதிபரின் சகோதரி கிம் யோ ஜாங்-க்கு தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன் சிறப்பு விருந்தளிக்க உள்ளார்.

மாலை மலர்

சியோல்:

குளிர்கால ஒலிம்பிக் போட்டி தென்கொரியாவில் நாளை தொடங்க உள்ளது. நீண்ட வருடங்களாக பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்த பக்கத்து தேசமான வடகொரியா இந்த ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதாக அறிவித்தது. தொடக்க விழாவில் ஒரே கொடியின் கீழ் இரு கொரிய தேசங்களும் அணிவகுக்கலாம் என தகவல்கள் வெளியாகியது.

ஆனால், நாங்கள் தனியாகவே அணிவகுப்போம் என வடகொரியா அறிவித்தது. இந்நிலையில், தொடக்கவிழாவில் பங்கேற்பதற்காக வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் இளைய சகோதரி கிம் யோ ஜாங் தலைமையில் 22 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் தென்கொரியா சென்றுள்ளனர்.

இந்நிலையில், நாளை யோ ஜாங்-க்கு பிரம்மாண்ட மதிய விருந்தளிக்க தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன் திட்டமிட்டுள்ளார். அப்போது, சில முக்கிய விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடக்கலாம் எனவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, நாளை ஒலிம்பிக் தொடக்க விழா நடக்க இருக்கும் நிலையில் வடகொரியாவில் பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்பை கிம் ஜாங் உன் நடத்தியுள்ளார். எப்போதும், இந்த அணிவகுப்பு ஏப்ரல் மாதம் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.