கோப்புப் படம் 
செய்திகள்

ரஷிய வான் எல்லையில் 19 வெளிநாட்டு உளவு விமானங்கள் - ராணுவம் தகவல்

ரஷியா நாட்டு வான் எல்லையில் ஒரே வாரத்தில் 19 வெளிநாட்டு ஜெட் விமானங்கள் உளவு பார்க்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாஸ்கோ:

அமெரிக்கா, ரஷியா, சீனா போன்ற நாடுகள் தங்களது ராணுவ பாதுகாப்பை பலப்படுத்திக்கொண்டே இருக்கின்றன. உயர் ரக ஏவுகணைகள், புதிய ரக ராணுவ விமானங்கள் ஆகியவற்றை தயாரிப்பதில் ரஷியா முன்னிலை வகித்து வருகிறது.

அணு ஆயுத பயன்பாட்டை கட்டுப்படுத்தும் அமெரிக்கா-ரஷியா இடையேயான ஒப்பந்தத்திலிருந்து கடந்த ஆகஸ்ட் 3 தேதி அமெரிக்கா வெளியேறியது.

இதையடுத்து அமெரிக்கா சிறிய ரக அணு ஆயுத சோதனைகளை நடத்தியது. நாடுகளுக்கிடையே ராணுவ பதற்றங்களை அதிகரிக்க அமெரிக்கா முயற்சிக்கலாம் என ரஷிய பாதுகாப்புத்துறை அமைச்சர் சமீபத்தில் தெரிவித்திருந்தார். மேலும் சிரியாவில் குர்துகள் மீது துருக்கி நடத்திய தாக்குதல் விவகாரத்தில், ரஷியாவும் துருக்கியும் ஒன்றிணைந்துள்ளன. 

இதையடுத்து அனைத்து நாடுகளும் தங்களது ராணுவ பாதுகாப்பு குறித்து எச்சரிக்கையாக உள்ளன.

இந்நிலையில், 19 வெளிநாட்டு ஜெட் விமானங்கள் ரஷிய வான்வெளி பகுதியில் உளவு பார்க்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டதாக அந்நாட்டு ராணுவ பத்திரிக்கை தகவல் வெளியிட்டுள்ளது.

இது குறித்து வெளியான தகவலில், கடந்த 7 நாட்களில் 19 வெளிநாட்டு உளவு விமானங்கள் ரஷிய வான் எல்லையில் உளவு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அவற்றை விரட்டியடிக்கவும், உள்ளே வரவிடாமல் தடுக்கவும் ரஷிய விமானங்கள் 11 முறை முடுக்கி விடப்பட்டன. சட்ட விரோதமாக எந்த விமானமும் எல்லைக்குள் வரவில்லை, என தெரிவிக்கப்பட்டிருந்தது.