தாக்குதல் நடந்த பகுதி 
செய்திகள்

சிரியாவில் ரஷிய படைகள் வான்வெளி தாக்குதல் - துருக்கி ஆதரவு கிளர்ச்சியாளர்கள் 78 பேர் பலி

சிரியாவில் அரசுப்படையினருக்கு ஆதரவாக ரஷியா நடத்திய வான்வெளி தாக்குதலில் துருக்கி ஆதரவு கிளர்ச்சியாளர்கள் 78 பேர் உயிரிழந்தனர்.

மாலை மலர்

டமாஸ்கஸ்:

சிரியாவில் 2011-ம் ஆண்டு முதல் நடைபெற்றுவரும் உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் சிரிய அரசுக்கு ரஷியா ஆதரவு அளித்து வருகிறது. அதேபோல் கிளர்ச்சியாளர்களுக்கு துருக்கி ஆதரவு அளித்து வருகிறது. 

இதற்கிடையில், துருக்கி ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் இட்லிப், அலிப்போ உள்ளிட்ட பகுதிகளை கைப்பற்றும் நோக்கில் சிரிய அரசு ஆதரவு படைகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அரசு ஆதரவு படைகளுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் நிலவி வருகிறது.

இந்நிலையில், துருக்கி ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள அந்நாட்டின் இட்லிப் மாகாணம் ஜபல் டுவெலி பகுதியில் உள்ள கிளர்ச்சியாளர்களை குறிவைத்து சிரிய அரசுக்கு ஆதரவாக ரஷிய விமானப்படை அதிரடி தாக்குதல் நடத்தியது. 

இந்த வான்வெளி தாக்குதலில் துருக்கி ஆதரவு கிளர்ச்சியாளர்கள் 78 பேர் உயிரிழந்தனர். மேலும் 100-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.