ரஷ்யா:
உலகின் பெரும்பாலான நிறுவனங்களை அச்சுறுத்தி வரும் ரான்சம்வேர் வைரஸ் ரஷ்யாவின் உள்துறை அமைச்சகத்தையும் விட்டு வைக்கவில்லை. ரான்சம்வேர் பாதிப்பில் இருந்து தற்காத்து கொள்ள ரஷ்யா அதிகாரிகள் புனித நீரின் உதவியை நாடியுள்ளனர்.
அதன்படி ரஷ்யாவின் உள்துறை அமைச்சக கணினிகளை ரான்சம்வேர் பாதிப்பில் சிக்காமல் காக்க, பிரார்த்தனை செய்யும்படி ரஷ்ய ஆர்த்தடாக்ஸ் தேவாலயத்தின் உதவியை உள்துறை அமைச்சக அதிகாரிகள் நாடினர். ரஷ்யாவை பொருத்த வரை ஆர்த்தடாக்ஸ் தேவாலயம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகின்றது.
உள்துறை அமைச்சகத்தின் அழைப்பை ஏற்று அமைச்சகத்தின் வளாகத்திற்கு வந்த தேவாலய பாதிரியார்கள் சிறப்பு பிரார்த்தனை செய்து அங்கிருந்த கணினி மற்றும் உள்துறை அமைச்சகத்தின் சர்வர்களில் புனித நீர் தெளித்தனர்.
இதைத் தொடர்ந்து சிறப்பு பிரார்த்தனைகள் செய்யப்பட்டுள்ளதால் கணினிகளில் ரான்சம்வேர் பாதிப்பு ஏற்படாது என்றும் ரஷ்ய ஆர்த்தடாக்ஸ் தேவாலயம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
ரஷ்ய ஆர்த்தடாக்ஸ் தேவாலயத்தின் தலைவர் பாட்ரியார்க் கிரில் ஆஃப் மாஸ்கோ அதிக சக்தி வாய்ந்தவர் என்ற வகையில் அடிக்கடி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்திப்பார். மேலும் இவர் கடவுளின் அதிசயம் என்றும் கருதப்படுகிறார் என்றும் கூறப்படுகின்றது.